118 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் உருகித் தவிக்கும் ஆந்திரா!
ஹைதராபாத் : அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆந்திராவில் 118 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகம, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சி, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
வெயில் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அனல்காற்று வீசுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 116 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத், வாராங்கல், ஐதராபாத், ஹாமம், மகாபூப்நகர், நல்கோல்டா மற்றும் நிசாமாபாத், கரிம்நகர் பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் முதல் முறையாக 108 டிகிரி :
முன்னதாகவே தொடங்கிய கோடையால் அவதிப்பட்ட மக்களை, கடந்த வாரம் பெய்த மழை சற்று குளிர்வித்தது. இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தை ஒரு வழியாக தாண்டப் போகிறோம் என நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களை கடந்த சில தினங்களாக வாட்டி வதைத்து வருகிறது சூரியன்.
அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னை, வேலூரில் மட்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்றுதான் 108 டிகிரியை வெயில் தொட்டுள்ளது. புதுச்சேரி 103, திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் 102, மற்ற இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.