சுற்றி வளைத்த பாதுகாப்பு படை.. சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. மாவோயிஸ்டுகள் 12 பேர் சுட்டுக்கொலை!
ராய்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பிடியா கிராமத்தை ஒட்டி மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொது திடீரென மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது. துப்பாக்கிச்சண்டை முடிவில், மாவோயிஸ்டுகள் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த தகவலை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்னு தியோ சாய் தெரிவித்தார். மேலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றிகரமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார். சத்தீஸ்கரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்ட 3-வது பெரிய அடியாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி கன்கேர் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஏப்ரல் 30 ஆம் தேதி நாராயண்பூர் மற்றும் கன்கே மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் பஸ்டர் பிராந்தியத்தில் மட்டும் இந்த ஆண்டில் 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications