ஆந்திரா வெறிச்செயல்.. பலியான 20 பேரும் தமிழர் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. !
திருப்பதி: செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திரா போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்த தமிழர்கள் 20 பேரும் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரங்களை சிலர் வெட்டியதாக கூறி ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இவர்கள் அனைவருமே தமிழகத்தின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். முன்னதாக இதுகுறித்து ஆந்திரா மாநில செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. காந்தராவ் கூறுகையில், ஸ்ரீநிவாசமங்களபுரத்தில் 11 பேரும் ஸ்ரீவாரிமெட்டுவில் 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 9 பேர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார். எஞ்சிய 7 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
பலியானோரில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய மூவர் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்துள்ள புதூர் நாடு, வேப்பங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் படுகாயமடைந்தவர்கள் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தினர் எனவும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications