சொந்த ஊருக்கு செல்ல 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த 12 வயது சிறுமி.. சுருண்டு விழுந்து சாவு
ராய்ப்பூர்: தெலுங்கானாவில் மிளகாய் பண்ணையில் வேலை செய்த 12 வயது சிறுமி 100 கிலோமீட்டர் தூரம் நடந்து தனது சொந்த ஊரான சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூருக்கு வந்த போது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள்.
சத்தீஸ்கரின் பழங்குடி மக்களில் பலர் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானாவில் உள்ள மிளகாய் பண்ணைகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12வயது சிறுமி ஜமோலோ(12 வயது) முதல்முறையாக தனது பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தெலுங்கானாவில் உள்ள பெருரு என்ற கிராமத்தில் மிளகாய் பண்ணையில் வேலை செய்து வந்தார்.

ஊருக்கு செல்ல முடிவு
கொரோனா பிரச்னை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 21 நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டது. இதனால் இனியும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்த சிறுமி ஜமாலோ மற்றும் உறவினர்கள் ஏப்ரல் 16 அன்று தெலுங்கானாவில் உள்ள பெருரு கிராமத்தை விட்டு சொந்து ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.

சத்தீஸ்கருக்கு நடந்தது
மூன்று குழந்தைகள் உள்பட 8 பெண்கள் என 13 பேர் குழுவாக சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளனர். ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 8 மணியளவில் இந்த குழு சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் எல்லையை அடைந்திருக்கிறது. 13 பேர் குழுவினர் 3 நாட்களாக 100 கிலோமீட்டருக்கு மேல் நடந்து வந்துள்ளனர்.

போலீசுக்கு தகவல்
சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆடெடில் உள்ள தனது வீட்டிலிருந்து 11 கி.மீ தூரத்தில் வந்து கொண்டிருந்த போது சிறுமி ஜமோலோ பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தாள். ஆனால் இறந்த தகவலையும் அந்த குழுவினரால் பெற்றோருக்கு சொல்ல முடியவில்லை. செல்போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டதால் சொல்ல முடியவில்லை. இறுதியாக அந்த குழு பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பால் கிராமத்தை அடைந்திருக்கிறது. அங்குதான் ஒருவரிடம் செல்போன் வாங்கி பெற்றோரை அழைத்து மகள் இறந்ததை சொல்லி இருக்கிறார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

மருத்துவ அதிகாரி பதில்
இதைபற்றி பிஜாப்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் பி ஆர் புஜாரி கூறுகையில், போலீசாருக்கு செய்தி கிடைத்ததும், அவர்கள் உடனடியாக விரைந்தனர். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு மற்றும் சோர்வு காரணமாக சிறுமி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த குழுவினர் காடுகள் வழியாக நடந்தார்கள், ஒரு இடத்தில் சிறுமி மயங்கி விழுந்து இறந்திருக்கிறாள். சிறுமிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது" என்று அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை மாலை மகளின் உடலை அவர்களது பெற்றோர் பெற்று சென்றனர்.












Click it and Unblock the Notifications