பெண் இயக்குநர்களே இல்லாத 1566 நிறுவனங்கள்.. அதிரடி அபராதம்!
மும்பை: செபி உத்தரவுப்படி, தங்களது நிறுவனங்களில் பெண்களை இயக்குநர்களாக கொண்டிராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பதியப்பட்டுள்ள 1375 நிறுவனங்கள் மீதும், தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 191 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தது ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும் என்று செபி விதிமுறையை வகுத்துள்ளது. ஆனால் இதைப் பல நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை பாய ஆரம்பித்துள்ளது.
பெண் இயக்குநர்களே இல்லாமல் உள்ள 1375 மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், 191 தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு செபி அபராதம் விதித்துள்ளது.
இதில் 2 பொதுத்துறை வங்கிகள் ஆகும். 22 பிற பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர்கள் குழுவில் ஆண், பெண் பாரபட்சம் இருக்கக் கூடாது என்பதற்காகவே பெண்களையும் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்பதை 2015, ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது செபி.
இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
அபராதம் விதிக்கப்பட்டுள்ள 1375 நிறுவனங்களில 201 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 1179 நிறுவனங்களும் இயங்காத நிலையில் உள்ளன. அதேபோல என்எஸ்இ நிறுவனங்கள் 191ல் 42 இயங்கி வருகின்றன, 149 இயங்காமல் முடங்கியுள்ளவை.