900 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பஸ்: 17 பேர் உயிரிழந்த பரிதாபம்
டேராடூன்: மலை பாதை வளைவில் இருந்து 900 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தராண்டில் நடந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து காட் பிளாக் என்ற பகுதிக்கு இன்று மதியம் தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இது முற்றிலும் மலைப்பாதையாகும். காட் பிளாக் பகுதிக்கு அரை கிலோமீட்டர் தூரம்தான் இருந்த நிலையில், நந்தபிரயாக் என்ற இடத்தில் திருப்பம் ஒன்றில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலை பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த இடம் சுமார் 900 அடி ஆழம் கொண்ட ஆபத்தான பகுதி என்பதால் பஸ் அப்பளம்போல நொறுங்கியது. அதனுள் இருந்த பயணிகள் பஸ்சுக்குள் இருந்து ஆங்காங்கு தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து வந்த மீட்பு படை குழுவினர் மலைப்பள்ளத்தில் பயணிகளை தேடி அலைந்தனர். இதில் 15 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஆகமொத்தம் 17 பயணிகள் இறந்தனர் இதில் 7 பேர் பெண்கள்.
மாலை வரையிலான நிலவரப்படி பஸ்சின் உடைந்த பாகங்கள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அந்த அளவுக்கு சுக்குநூறாக அது உடைந்துள்ளது. மேலும் ஐந்து பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகி்சைச பெறுகிறார்கள். இந்த விபத்து குறித்து அறிந்ததும் உத்தரகாண்ட் ஆளுநர் அஜிஸ் குரேசியும், முதல்வர் ஹரிஷ் ராவத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெறும் பயணிகளுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications