அரசு இணையதளத்தில் 18 பேரின் பெயர்களை நீக்கியது சட்டத்தை மதிக்காத செயல்... தங்கதமிழ் செல்வன்
அரசு இணையதளத்தில் 18 பேரின் பெயர்களை நீக்கியது சட்டத்தை மதிக்காத செயல் என்று தங்க தமிழ் செல்வன் சாடியுள்ளார்.
கூர்க்: தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 18 எம்.எல்.ஏக்களின் பெயர்களை தமிழக அரசு இணையதளத்தில் இருந்து நீக்கியது சட்டத்தை மதிக்காத செயல் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இந்நிலையில் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதைத் தொடர்ந்து தகுதிநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, 18 தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்தவும், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் தடை விதித்துள்ளார்.
அரசு இணையதளத்தில்...
இந்நிலையில் சபாநாயகரால் சமீபத்தில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான 18 பேரின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக திடீரென அரசு இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சட்டத்தை மதிக்காதவர்கள்
இணையதளத்தில் 18 பேரின் பெயர்கள் நீக்கம் குறித்து கூர்க்கில் உள்ள தங்க தமிழ் செல்வன் கூறுகையில், சட்டத்தை மதிக்கிறவர்கள் யாரும் அதிகாரத்தில் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆட்சியாளர்களுக்கு துளியும் கிடையாது. தங்களை எப்படி வளப்படுத்திக் கொள்வது என்றே உள்ளார்கள்.
கண்டனம்
தகுதி நீக்க வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ள போது அரசு இணையதளத்தில் இருந்து 18 பேரையும் நீக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டத்தை மதிக்காதவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.
வருங்காலத்தில் நல்ல பதிலடி
தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் கும்பலுக்கு வருங்காலத்தில் மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள். மக்கள் மன்றத்தில் மட்டும் அல்லாது நீதிமன்றத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றார்.