திடீர்னு பறந்த "மர்ம ட்ரோன்".. அதுவும் நைட் நேரம்.. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்.. எல்லையில் டென்ஷன்
இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளது
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
கடந்த 9 மாதங்களாகவே, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது.

டிரோன்
இதுவரை 191 ஆளில்லா விமானங்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.. இந்த 191 ட்ரோன்களில், 171 ட்ரோன்கள் பஞ்சாப் செக்டார் எல்லை வழியாகவும், 20 ட்ரோன்கள் ஜம்மு செக்டர் எல்லை வழியாகவும் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கின்றவாம்.. இந்த ட்ரோன்களில் பெரும்பாலானவை தப்பி ஓடிவிட்டன... மொத்தம் 7 ட்ரோன்கள் மட்டுமே எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது..

AK 47
இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா ட்ரோன்களில், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கொண்டு செல்லப்பட்ட பல்வேறு ஏ.கே ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், எம்பி4 கார்பைன்கள், கார்பைன் லீப்ஸ், அதிவிரைவு வெடிகுண்டுகள் மற்றும் போதைப் பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதிகளில் ஆங்காங்கே கேம்ப் அமைத்து இருக்கும் பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ள நிலையில், இந்த அத்துமீறல்களும், அடாவடிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ட்ரோன்கள்
கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது.. அதிகாலை 4.35 மணி இருக்கும்.. பஞ்சாபின் குர்தாஸ்பூர் செக்டரில் அமைந்துள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக, ட்ரோன் ஒன்று திடீரென நுழைந்தது... இதனை பார்த்ததுமே, வீரர்கள் 17 ரவுண்டுகள் குண்டுகளால் சுட்டனர். அந்த ட்ரோனின் இறக்கை ஒன்று சேதமடைந்த நிலையில், அந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.. ஆனால், அதற்குள் இன்னொரு சம்பவம் நடந்துவிட்டது..

இறக்கைகள்
நேற்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் நுழைந்துவிட்டது.. இதை கண்டதுமே பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதன் எடை 12 கிலோ உள்ளது.. துப்பாக்கி சூட்டில் மொத்தம் 8 இறக்கைகளில் 2 இறக்கைகள் சேதமடைந்து உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 2 நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ஆளில்லா விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications