பீகார்: கண்ணிவெடிக்கு 2 போலீசார் பலி… 7 பேர் காயம்
ஔரங்காபாத்: பீகார் மாநிலம் ஔரங்கபாத் மாவட்டத்தில் இன்று நிலக்கண்ணிவெடி வெடித்ததில் 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.
பீகாரில் வரும் 10-ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஔரங்காபாத் மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திப்ரா காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு பகுதியில் இன்று நடத்திய சோதனையில், மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த சிறப்பு குழுவினர், அதனை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணிவெடி திடீரென வெடித்துச் சிதறியது.
இதில், 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திப்ரா காவல்நிலைய பொறுப்பாளர் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சாடர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.