எண்ணை நிறுவன கிட்டங்கியில் வெடிவிபத்து - 2 பேர் பலி, 13 பேர் காயம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கல்ப் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வெடிபொருள் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத்தின் குக்கட்பல்லி பகுதியில் கல்ப் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான வெடிப்பொருள் கிட்டங்கி ஒன்று உள்ளது. அங்கு பழைய டெட்டனேட்டர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கு பரவாமல் போராடித் தடுத்தனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் நடக்கும் 4வது பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.