புரு அகதிகள்.. பற்றி எரியும் திரிபுரா- போலீஸ் துப்பாக்கிச் சூடு- வன்முறை- 2 பேர் பலி!
அகர்தலா: புரு அகதிகள் விவகாரத்தில் திரிபுராவில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் 1997-ல் இனங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து புரு இன மக்கள் அகதிகளாக திரிபுராவில் தஞ்சமடைந்தனர்.

சுமார் 32,000 புரு அகதிகளுக்கு காஞ்சன்பூர், பானிசாகர் ஆகிய இடங்களில் மறுவாழ்வு முகாம்கள் அமைத்து தரப்பட்டன. இந்த அகதிகளுக்கு ரூ600 கோடி மதிப்பில் நிரந்த குடியிருப்புகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக திரிபுரா அரசுடன் ஜனவரி மாதம் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் உள்ளூர் மக்களோ புரு அகதிகளுக்கு தங்கள் பகுதியில் மட்டும் நிரந்தர குடியிருப்புகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திரிபுராவின் அனைத்து மாவட்டங்களிலும் புரு அகதிகளுக்கான குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பின் நவம்பர் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு பாஜக, சிபிஎம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து நடைபெற்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல போலீசார் படுகாயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களால் திரிபுராவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications