ஈராக் போர்முனையில் தத்தளித்த 2 இந்திய செவிலியர்கள் மீட்பு!
டெல்லி: ஈராக்கில் போர்முனையில் தத்தளித்த 2 இந்திய செவிலியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சகட்டமடைந்துள்ள நிலையில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக டெல்லியில் நேற்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன் கூறியதாவது:

ஈராக்கில் போர்முனையில் சிக்கிய இந்திய செவிலியர்கள் இருவர் கர்பாலாவில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர்.
மேலும் திக்ரீத் நகர மருத்துவமனைகளில் 46 இந்திய செவிலியர்கள் யாரும் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களுக்கு மின்சாரம், உணவு வசதி கிடைத்து வருகிறது. அவர்களை மீட்பதற்காக பலருடன் இணைந்து பாடுபட்டு வருகிறோம்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள 39 இந்தியர்கள் நலமுடன் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களும் விரைவில் மீட்கப்படுவர்.
இவ்வாறு சையத் அக்பருதீன் கூறினார்.












Click it and Unblock the Notifications