டெல்லி போராட்டத்தில் விவசாயிகளுக்கு வயிற்றுப் போக்கு... 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் 24 நாட்களாக போராடி வரும் விவசாயிகளில் 2 பேருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 24 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
நூதனப் போராட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 24வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களது உடல் நலம் மிகவும் மோசமடைந்து வருகிறது.
திடீர் பாதிப்பு
இந்நிலையில் ராஜேந்திரன் மற்றும் அப்பாண்டி ஆகிய இரண்டு விவசாயிகள் கடும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த மற்ற விவசாயிகள் அவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மயக்கம்
இதே போன்று சாலையில் படுத்து உருளும் போராட்டத்தை நேற்று விவசாயிகள் மேற்கொண்ட போது இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் அய்யாகண்ணுவிற்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் சற்று தேறியதும் இன்று மீண்டும் போராட்டத்தில் வந்து அமர்ந்துவிட்டார் அய்யாகண்ணு.
உறுதி
இதுகுறித்து யாருக்கு என்ன ஆனாலும், பயிர்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாமல் இங்கிருந்து அகலப் போவதில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது பிணங்கள்தான் இங்கிருந்து செல்லும் என்று அய்யாகண்ணு திட்டவட்டமாக கூறினார்.