காஷ்மீரில் எல்லை ஊடுருவல் முயற்சி! அடாக் மோடில் ராணுவம்.. 2 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குட்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். ஹலன் பகுதியில் ஒரு இடம் விடாமல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரை தீவிரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டனர்.

எனவே அவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த சண்டையில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். எனவே அவர்களை 48 மணி நேரமாக ராணுவத்தினர் தேடி வந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிலர் ஊடுருவ முயன்றது தெரிய வந்தது.
இதை எதிர்த்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து காஷ்மீர் போலீஸ் கூறுகையில், "நாங்கள் ராணுவத்துடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தோம். அப்போதுதான் இந்த ஊடுருவல் சம்பவம் குறித்த தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து தீவிரவாதிகளை எதிர்த்து துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டோம்.
இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. நேற்று ஏற்கெனவே நேற்று ஒரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்" என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பின்னர் அமைதி நிலவி வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இந்த சட்டம் நீக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கூட ஜனநாயக ரீதியாக அரசு அனுமதிக்கவில்லை என்றும் தாங்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிடிபி, தேசிய மாநாட்டு கட்சி ஆகிய தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மட்டுமல்லாது 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில்தான் தீவிரவாதிகள்-ராணுவத்தினர் இடையேயான மோதல் சம்பவங்கள் உச்சம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications