ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 இந்தியர்கள்?
டெல்லி: ஈராக்கில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரின் உச்சகட்டமாக ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய நகரங்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 பேர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர்களில் இருவர் மகாராஷ்டிராவின் தானே நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.