19 மணி நேரம் போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு
பெரோசாபாத் : உத்தரபிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான்.
பெரோசாபாத் மாவட்டத்தில் உள்ள சைபூரி கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ். அவரது 2 வயது மகன் கிஷன். நேற்று சிறுவன் கிஷன் தனது வீடு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகே உள்ள வயலில் இருந்த 70 அடி திறந்த வெளி ஆழ்துளை கிணற்றில் கிஷன் தவறி விழுந்தான்.

இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. பெற்றோர்களும் பொது மக்களும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்து 8 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சிறுவன் விழுந்த இடத்திற்கு அருகே ராட்சத பள்ளம் தோண்டி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 19 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சிறுவன் கிஷன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவனை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் கிராம மக்கள், குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications