குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு: மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரி மனு தள்ளுபடி!

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடந்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இதை ஜாகியா ஏற்றுக் கொள்ளவில்லை; விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் விசாரிக்க வேண்டு கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஜாகியா, அகமதாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த அக்டோபர் 28ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் டிசம்பர் 26ம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு மோடியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது என்பதால், இந்தியா முழுவதும் இந்த தீர்ப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications