புனேவில் ஐடி பார்க் அருகே பிணமாகக் கிடந்த 24 வயது இன்போசிஸ் ஊழியர்
புனே: புனேவில் 24 வயதாகும் இன்போசிஸ் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் ஐடி கிராமம் ஹின்ஜேவாடி. இங்கு ராஜீவ் காந்தி ஐடி பார்க் உள்ளது. இந்த ஐடி பார்க் அருகே வியாழக்கிழமை இரவு 24 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்த நபரின் உடல் முழுவதும் காயங்களாக இருந்தது. அவரது உடலில் இன்போசிஸ் நிறுவன அடையாள அட்டை இருந்தது. அதில் வருண் ஷெர்ரி என்று அவரது பெயர் எழுதப்பட்டிருந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வருண் வியாழக்கிழமை தான் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.