ராஜஸ்தானில் பயங்கரம்... ஓடும் பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது - 25 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், பேருந்தில் பயணித்த 25 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் வழியாக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
இதில், பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்து, 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
தீக்காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் திருமண வீட்டைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.