மிஸ் ஆன கண்ட்ரோல்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்! உத்தரகண்ட்டில் திருமணத்திற்கு சென்ற 25 பேர் பலி!
டேராடூன்: உத்தரகண்ட்டில் ஏற்பட்ட மோசமான விபத்து ஒன்றில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மலைப் பிரதேசங்கள் அதிகம் இருக்கும். அங்கு இரு ஊர்களுக்கும் இடையே பயணிக்கவும் கூட மலைப் பிரதேசங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கும்.
இதனால் அங்குச் சாலை மார்க்கமாகப் பயணிப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இல்லையென்றால் எளிதாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

உத்தரகாண்ட் பஸ் விபத்து
உத்தரகண்ட் மாநிலத்தில் சுமார் 45 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, பௌரி கர்வால் மாவட்டத்தில் உள்ள சிம்டி கிராமத்திற்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. பேருந்தில் சுமார் 45 பேர் பயணித்த நிலையில், அவர்கள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

25 பேர் பலி
நேற்றிரவு இந்த பேருந்து விபத்தை நடந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 20 பயணிகள் மீட்கப்பட்டனர். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. மீட்புப் படையினர் மட்டும் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்றால் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சிகிச்சை
அந்த பேருந்து மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, பள்ளத்தாக்கில் பாய்ந்து 500 மீட்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது தொடர்பாக டிஜிபி அசோக்குமார் கூறுகையில், "துமகோட்டின் பிரோகல் பகுதியில் நேற்று இரவு நடந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். காயங்கள் உடன் மீட்கப்பட்டுள்ள 21 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இரங்கல்
பவுரி கர்வாலில் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 122 கிமீ தொலைவில் உள்ள லால்தாங்கில் இருந்து இந்த திருமணக் குழுவினர் கிளம்பி உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நடந்து உள்ளது. இதற்கான காரணம் எதுவும் சரியாக தெரியவில்லை. இந்த விபத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "உத்தரகாண்ட் பவுரியில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications