ஹோலி வன்முறை.. கலர் பூசிக்கொள்ள மறுத்ததால் 25 வயது இளைஞர் கழுத்து நெரித்து கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஹோலி கலர் பொடியை பூசிக்கொள்ள மறுப்பு தெரிவித்த இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோலி அன்று இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது ஹோலி பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து உள்ளுர் மக்கள் கூறியதாவது,

"ஹன்சராஜ் எனும் 25 வயது இளைஞர் ரல்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே அசோக், பப்லு, கலுராம் என 3 பேர் ஹோலி கலர் பொடியை எடுத்து வந்திருக்கின்றனர். ஹன்சராஜ் மீது பொடியை பூச முயன்றுள்ளனர். இளைஞர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல், இளைஞரை சரமாரியாக தாக்கியிருக்கிறது. பெல்ட்டை கொண்டு அடித்திருக்கிறார்கள்.
இறுதியாக ஒருவர் இளைஞரின் கழுத்தை இறுக்கமாக பிடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் மொத்த கிராமத்தையும் ஆத்திரமடைய செய்திருக்கிறது. இளைஞரின் சடலத்தை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்களும், கிராம மக்களும் மறியல் செய்துள்ளனர். இதனால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், இளைஞரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோரியிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
ஹோலி பெயரில் நடக்கும் வன்முறைக்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே ஹோலி அன்று இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருந்தார். பீகாரின் மதுபனி மாவட்டத்தில் உள்ள பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவான ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல்,
"ஒரு வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. அதில் ஒரு வெள்ளியில் ஹோலி வருகிறது. எனவே ஹோலி பண்டிகையை இந்துக்கள் கொண்டாட இஸ்லாமியர்கள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது கலர் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது. இதுபோன்ற பிரச்சனை ஏதேனும் இருந்தால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கலாம். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம்" என்று கூறியிருந்தார்.
அதேபோல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஹோலி வருடத்தில் ஒரு வெள்ளிக்கிழமையில்தான் வருகிறது. ஆனால் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் தொழுகைகள் நடக்கின்றன. ஒருவேளை ஹோலி வெள்ளிக்கிழமையில் மசூதிக்கு போக நினைத்தால் நீங்கள் நிறங்களை தவிர்க்க கூடாது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications