காவிரி.. உச்சநீதிமன்ற உத்தரவையும் தாண்டி, கர்நாடகாவிற்கு கிடைக்கிறது கூடுதல் நீர்.. தவறவிட்ட தமிழகம்
Recommended Video

பெங்களூர்: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், வெளியே தெரியும் நன்மைகளை விடவும், அதிக நன்மை கர்நாடகாவுக்குத்தான் கிடைக்கிறது.
2007ம் ஆண்டு, காவிரி நடுவர்மன்றம் வழங்கிய, இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த நிலையில், கடந்த மாதம், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

தமிழக தண்ணீர் அளவு
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழகத்திற்கான நீரில் அளவை 14.75 டிஎம்சியாக குறைத்து, 177.2 டிஎம்சி என அறிவித்தது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் பங்கீடு செய்ய உத்தரவிடப்பட்டது. பெங்களூர் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கர்நாடகாவிற்கு கூடுதல் நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்திற்கு குறைவான நீரும், கர்நாடகாவிற்கு அதிக நீரும் கிடைக்கப்போகிறது என்பது இதன் மூலம், பரவலாக அறியப்பட்ட விஷயம். ஆனால், உத்தரவில் குறிப்பிடப்படாத மேலும் சில நன்மைகளும் கர்நாடகாவுக்கே கிடைக்க போகிறது.

கூடுதல் தண்ணீர் கர்நாடகாவிற்கு
கர்நாடகா காவிரி நீரில் மறு உற்பத்தி செய்யும் 26.9 டிஎம்சி மற்றும் உபரியாக கிடைக்கும் 39 டிஎம்சி தண்ணீர் பற்றி உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிடவில்லை. கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்ட 284.75 டிஎம்சி தண்ணீர் போக, இந்த நீரும் கர்நாடகாவுக்கே கிடைக்கப்போகிறது. இதன் மூலம், அம்மாநிலம் மொத்தம் 350.65 டிஎம்சி தண்ணீரை பெறப்போகிறது.

நீர்மின் நிலைய திட்டங்கள்
மேலும், மேகதாது மற்றும் சிவனசமுத்ரா ஆகிய நீர் மின் நிலைய பணிகளுக்கு உபரி நீரை பயன்படுத்திக்கொள்ள முடியும். நீர் மின் திட்டங்களுக்கு காவிரியின் உபரி நீரை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு சுப்ரீம் கோர்ட் உத்தரவில் இல்லை. அதுபோன்ற உத்தரவை பெறும் முயற்சியில் தமிழகம் சரியான வாதங்களை முன் வைக்கவில்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடைமடைக்கு கூடுதல் நீர்
மொத்தத்தில், காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பால் கர்நாடகாவிற்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. உலகம் முழுக்கவுமே, நதிநீர் பாயும் கடைமடை பகுதிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது சட்ட வழக்கம். ஆனால், அந்த சட்டத்தின் சாதகங்களை கேட்டு பெறுவதில், கர்நாடகாவிடம், தமிழகம் தோல்வியை தழுவியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications