2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!
டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதாக கூறினார். எனவே இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரும் கடந்த 26ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் மனுதாக்கல் செய்தனர். அதேசமயம் மறதி நோய் உள்ளதால் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தயாளு அம்மாளின் வழக்கறிஞர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ நீதிமன்றம், இது தொடர்பாக தயாளு அம்மாள் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்து வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications