கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி: ராசா, கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஆக. 20-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: டிபி குழுமத்திற்கு 2ஜி உரிமம் வழங்குவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிபி குழுமத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்குவதற்காக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாகிக் உஸ்மான் பல்வா உள்பட 10 பேர் மீதும், 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு, கடந்த மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கப்பிரிவு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு இன்று (6ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா மற்றும் கனிமொழி மீதான ஜாமீன் மனு குறித்து தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.