பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.. ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப் பதிவு நாளில் 2ஜி வழக்கில் தீர்ப்பு!
ஆர்கே நகர் தேர்தல் வாக்குப் பதிவு நாளிலேயே 2ஜி வழக்கில் தீர்ப்பும் அளிக்கப்பட இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளில்தான் இந்தியாவே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
ஜெயலலலிதா மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது டிசம்பர் 21-ந் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவும் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கபட்டு தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. இத்தேர்தலில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்கிறது.

தமிழக எதிர்பார்ப்பு
அதேநேரத்தில் ஜெயலலிதா இல்லாத சூழலில் வலிமையான தலைமை அதிமுகவுக்கு இல்லாத நிலையில் திமுக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

2ஜி வழக்கில் தீர்ப்பு
ஆர்.கே.நகர் தேர்தல் அதிமுக- திமுகவுக்கு ஒரு அக்னி பரீட்சைதான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் அதே டிசம்பர் 21-ந் தேதியன்றுதான் இந்தியாவையே அதிர வைக்கப் போகும் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பையும் அளிக்கப் போவதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு முக்கியம்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆகையால் இந்த வழக்கு திமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நிச்சயம் இந்த வழக்கு திமுகவுக்கும் ஒரு அக்னி பரீட்சைதான்.

2ஜி தீர்ப்பு
தமிழக அரசியல் கட்சிகளை பெரும் பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இங்கே காலூன்ற முடியாத டெல்லியின் திட்டம். அதை கனகச்சிதமாக நிறைவேற்றும் வகையில்தான் டிசம்பர் 21-ந் தேதி ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவும் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பும் ஒரே நாளில் நடைபெற இருக்கிறதோ என்ற தோற்றத்தை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications