எபோலா அறிகுறியுடன் டெல்லி வந்த நைஜீரிய முதியவர் - புனேயில் ரத்த மாதிரி ஆய்வு
டெல்லி: டெல்லி வந்த நைஜீரிய முதியவருக்கு எபோலா அறிகுறி காணப்பட்டதால் அவரது ரத்த மாதிரி புனேக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோய்க்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். மற்ற நாடுகளும் இந்நோய் பரவா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

எபோலா நோய்த் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள், விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நோய்த் தொற்று அறிகுறி காணப்படுபவர்கள் மேற்கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை டெல்லி வந்த நைஜீரிய முதியவருக்கு எபோலா காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால், உடனடியாக அவருக்கு முதற்கட்ட எலீசா ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதில் தெளிவான முடிவுகள் தெரிய வராததால் அவரது ரத்த மாதிரி புனே சோதனை மையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.
நைஜீரிய முதியவருடன் வந்த மற்ற இரண்டு பயணிகளுக்கு எபோலா நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படாததால் அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப் பட்டனர். எபோலா பாதிப்பு காணப்பட்ட முதியவரை மட்டும் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல், நேற்று காலை நைஜீரியாவிலிருந்து டெல்லி வந்த மேலும் இருவர் உட்பட இதுவரை 5 பேருக்கு எபோலா ரத்த மாதிரி சோதனை நடத்தப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications