மே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம்
கொல்கத்தா: மே. வங்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி, மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் ஹல்டியா என்ற பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது.
இந்த சுத்திகரிப்பு ஆலையில் இன்று பிற்பகல் நேரத்தில் மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
3 பேர் உயிரிழப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஆலையில் ஏற்பட்ட இந்த அதிபயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் ஸ்பிரிட் உற்பத்தி செய்யப்படும் டிஎச்டி என்ற பிளாக்கில் பிற்பகல் நேரத்தில் மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை
ஷட் டவுன் பயிற்சி
இருப்பினும், ஆலையை ஷட் டவுன் செய்யும்போது செய்ய வேண்டிய பயிற்சிகள் நடந்த போது இந்த மோசமான விபத்து நிகழ்ந்ததாக ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹால்டியா சுத்திகரிப்பு ஆலையில் பல்வேறு பெரிய யூனிட்களை ஷட் டவுன் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
44 பேர் படுகாயம்
MSQ யூனிட்டில் இது தொடர்பான பணிகள் நடைபெற்ற போது, 12.50 மணி அளவில் முதலில் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 44 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். மேலும், மூன்று பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ஹால்டியா சுத்திகரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வர் இரங்கல்
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஐ.ஓ.சி., ஹால்டியாவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். மூன்று விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோய்விட்டன, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கா கொல்கத்தா கொண்டு வரப்படுகின்றனர். காயமடைந்தோர் சிகிச்சைக்கு மேற்கு வங்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.