சபரிமலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு - 3 லட்சத்து 63 ஆயிரத்து 614 பேர் தரிசனம்
சபரிமலை: சபரிமலையில் 18 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு வசதி மூலம் மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 614 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்பவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் வந்து சுவாமிதரிசனம் செய்வது தெரியவந்துள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக கேரள போலீஸ் சார்பில் ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக இதில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

முன்பதிவு செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மூன்று மணி நேரம் முன்னதாக பம்பையில் தங்கள் பதிவு அத்தாட்சியை கொடுத்து கூப்பன் பெற வேண்டும்.
அந்த கூப்பணுடன் சன்னிதானம் வந்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள கியூவில் நின்று18 ஆம் படியேற செல்ல வேண்டும். இவர்கள் மரக்கூட்டத்திலிருந்து சரங்குத்தி செல்லும் கியூவிற்கு செல்லாமல் நேரடியாக சன்னிதானம் செல்ல முடியும்.
மண்டல காலம் தொடங்கியது முதல் நேற்று வரை 18 நாட்களில் மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 614 பேர் தரிசனம் செய்துள்ளனர்.தினமும் சராசரியாக 20 ஆயிரத்து 200 பேர் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் நடத்தியுள்ளனர்.
இது பதிவு செய்த மொத்த எண்ணிக்கையிலிருந்து சுமார் 35 முதல் 45 சதவீதம் குறைவு என விர்ச்சுவல் கியூ பொறுப்பு வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications