மணிப்பூரில் 4 மாதங்களாக அடங்காத வன்முறை.. 3 பழங்குடியினர் சுட்டுக்கொலை... தொடரும் அட்டூழியம்
இம்பால்: மணிப்பூரில் இன்று காலை நடைபெற்ற கலவரத்தில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த குக்கி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள மெய்டெய் மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, மெய்டெய் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், மெய்டெய் மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்றை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.
இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 4ம் தேதி பேரணி நடத்தினர். அதுபோல மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்தினர். இது இரண்டும் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 200க்கும் அதிகமானோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தன. இதனையடுத்து மணிப்பூர் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்திலும் கடும் அமளி ஏற்பட்டது. இருந்த போதிலும் வன்முறை குறையவில்லை.
இந்நிலையில் இன்றும் மணிப்பூரில் கலவரம் நடந்திருக்கிறது. இந்த கலவரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் உள்ள இரெங் நாகா கிராமத்திற்கு அருகில் காலை 7 இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த மூன்று பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மணிப்பூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications