பெங்களூரில் குழந்தை உட்பட ‘புளியோதரை’ சாப்பிட்ட 3 பேர் பலி: ஒருவர் கவலைக்கிடம்
பெங்களூர்: பெங்களூரில் விஷ உணவு சாப்பிட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். மேலும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பெங்களூர் ஸ்ரீராமபுரம் ஓகலிபுரம், பிளாட்பாரம் ரோடு அம்பேத்கார் குடிசை பகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரவணன் (வயது 28). இவருடைய மனைவி அமுல் (24). இவர்களுக்கு 3 வயதில் ஜெகதீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் நேற்று முந்தினம் சரவணனின் வீட்டிற்கு வந்துள்ளான் அவரது உறவினர் மகனான சீனு என்ற சீனா(6) .இரவில் அனைவரும் புளியோதரைச் சாப்பிட்டதாகச் சொல்லப் படுகிறது. இரவு உணவிற்குப் பின், அக்கம்பக்கத்தாருடன் சிரித்துப் பேசியுள்ளனர் சரவணன் குடும்பத்தார்.
அதனைத் தொடர்ந்து இரவு உறங்கச் சென்ற அவர்களுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாந்தி வரவே, அக்கம்பக்கத்தார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமுலும் சிறிது நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். சரவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கே.ஜி.சென்டிரல் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், சரவணன் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட புளியோதரை விஷமாக (புட்பாய்சன்) மாறி 3 பேரும் பலியாகி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் சரவணன், அவரது மனைவி அமுல் சந்தோஷமாக சிரித்து பேசி உள்ளனர். அதன்பிறகு தான் அவர்கள் தூங்குவதற்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதுகுறித்து உண்மை நிலையை அறிவதற்காக, போலீசார் புளியோதரையை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கை வந்த பிறகு தான் எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்து விட்டார்கள்.