சத்தீஸ்கரில் காட்டு யானைக் கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி... விறகு சேகரித்தபோது பரிதாபம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் விறகு சேகரிக்கச் சென்ற 3 பெண்கள் காட்டு யானை கூட்டத்திடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கர்டாலா வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக பெண்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது காட்டு யானைக் கூட்டமொன்று அவர்களை விரட்டியுள்ளது. யானைக் கூட்டத்திடமிருந்து தப்பிப்பதற்காக பெண்கள் பயந்து ஓடியுள்ளனர்.
அப்போது கால் தடுக்கி விழுந்த மூன்று பெண்களின் மீது 15க்கும் மேற்பட்ட யானைகள் ஏறி, இறங்கி ஓடியுள்ளது. இதில் அப்பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அப்பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தாருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகம் தொடர்பான ஆவண சரிபார்ப்பு நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், இந்த குடும்பங்களுக்கு மேலும் தலா 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications