டெல்லியில் பயங்கரம்.. 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சாக்கடையில் வீசிய இளைஞர்
டெல்லியில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: டெல்லியில் 3 வயதேயான சிறுமியை பலாத்காரம் செய்து சாக்கடையில் வீசிய இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்து விட்டதாக கருதப்பட்ட அந்த சிறுமிக்கு உயிர் இருந்தது. மருத்துவர்களின் விரைவான சிகிச்சையால் குழந்தை உயிர் பிழைத்தது.
டெல்லியில் உள்ள சராய் ரோஹில்லா என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையப் பகுதியில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர்களது வீட்டுக்கு அருகே பீகாரைச் சேர்ந்த பல்பீர் என்பவரும் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று பல்பீர், அந்த 3 வயது சிறுமியை தூக்கிச் சென்று சாக்லேட் கொடுத்து பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த நிலையில் 3 வயது சிறுமியின் மன நலம் பாதித்த 6 வயது சகோதரி, தனது தங்கையை பல்பீர் எடுத்து சென்று விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவருக்கு மன நிலை சரியில்லாததால், பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரித்தபோது சிறுமியின் சகோதரி, பல்பீரின் பெயரைத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். இதையடுத்து பல்பீரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது குடிபோதையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று விட்டு ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாக்கடையில் உடலைப் போட்டு விட்டதாக கூறியுள்ளார்.
விரைந்து சென்ற போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு துரித கதியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிறுமியின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறியுள்ளனர்.