அயோத்தியில் 30 'பாம் ஸ்குவாடு'கள் குவிப்பு.. தீவிரவாத தாக்குதல் அபாயம் எதிரொலி!
அயோத்தி: அயோத்தியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 30 வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அகற்றும் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அயோத்தி தீர்ப்பு நெருங்கி வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அயோத்தி முழுவதும் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அங்கு தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தால் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 30 படைகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள தர்மசாலாக்களில் தங்கியுள்ளோர் நவம்பர் 12ம் தேதிக்குள் வெளியேறி விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தர்மசாலாக்களையும் வருகிற செவ்வாய்க்கிழமை இரவுக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூரைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் மாநிலப் போலீஸார் உள்பட 300 கம்பெனி பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
சர்ச்சைக்குரிய நிலத்திற்கு அருகே உள்ள ராம் கோட் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அயோத்தி தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் மிகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.