கை கோர்த்த 3000 பஞ்சாப் விவசாயிகள்.. ‘நாங்கள் அனாதைகள் இல்லை’.. கண் கலங்கிய அய்யாகண்ணு!
பஞ்சாப் மாநிலம் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 3000 விவசாயிகள் இன்று டெல்லி சென்று போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது விவசாயி அய்யாகண்ணு கண் கலங்கியவாறு ஆதரவை ஏற்றுக் கொண்டார்.
டெல்லி: பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி 21 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தை டெல்லியில் நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 3000 விவசாயிகள் இன்று தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விவசாயி அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அனாதைகள் அல்ல
நாங்கள் அனாதை என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்று பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த விவசாயிகள் 3000 பேர் எங்களை வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களை பிரதமர் மோடி சந்தித்து பேசவில்லை என்றால் பஞ்சாப், ஹரியானா, உபி, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து விவசாயிகள் என ஒரு கோடி பேரை திரண்டுவோம். டெல்லியை முற்றுகையிடுவோம்.

7000 கோடி கடன்
தமிழகத்தை வேண்டுமென்றே வஞ்சிக்க வேண்டும் என்று மோடி எங்களை பார்க்க மறுக்கிறார். கூட்டுறவு வங்கியில் வாங்கிய 7000 கோடி ரூபாயை மாநில அரசு தள்ளுபடி செய்து விட்டது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்தான் 7000 கோடி உள்ளது. இதைத்தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

நிரந்தர தீர்வு
மழை இல்லை, வறட்சி என வாங்கிய கடனை கட்ட முடியாமல் 2008 ஆம் ஆண்டு முதல் கடன் சேர்ந்துவிட்டது. எங்களுடைய பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும்.

மத்திய அரசின் கடமை
ஆனாலும், எங்களுக்கு லாபகரமான விலை கொடுக்கும் வரை, நதிகளை இணைத்து தண்ணீர் கொடுக்கும் வரை கடன் தள்ளுபடியை கேட்பது எங்களது உரிமை. அதனை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஏனென்றால் மத்திய அரசால் எங்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை.

விலை நிர்ணயம்
நெல், கரும்பு என அனைத்திற்கும் விலையை நிர்ணயம் செய்வது மத்திய அரசுதான். அவர்களை மீறி தமிழக அரசால் எதையும் செய்ய முடியாது. இப்போதைக்கு ஒரு கோடி ஏக்கர் நிலம் காய்ந்து விட்டது. இதற்காகதான் நஷ்டஈடு கேட்கிறோம். இது எங்களது உரிமை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications