அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசு கடிதம்
டெல்லி: குஜராத் மாநிலத்தை மாதிரியாக கொண்டு, காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டம், தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என கடந்த மாதம் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் அறிவித்தார். இந்த அறிவிப்பை பாராட்டியுள்ள மத்திய அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு ஒவ்வொரு மாநிலத்துக்கும் கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி அளித்த பேட்டி:
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் தடுப்பதற்காகவும், இந்த வழக்குகளை திறம்பட கையாள்வதற்காகவும் போலீஸ் துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
இதை முன் மாதிரியாக கொண்டு இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்துமாறு ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். போலீஸ் துறையில் அதிகமான பெண்கள் இருந்தால்தான், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் தைரியமாக புகார் கொடுப்பதை ஊக்கப்படுத்தவும், இந்த புகார்களை விசாரிக்கவும் உதவிகரமாக இருக்கும்.
முதியோர்களுக்கு, தங்கள் மகன்கள் மற்றும் மருமக்களால் பல்வேறு துன்பங்கள் இழைக்கப்படுகின்றன. இதனால் முதியவர்களுக்கு தங்கள் குடும்பத்தினரால் எந்த பாதுகாப்பும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எனவே முதியோரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து எனது அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
குடும்ப வன்முறைகளில் இருந்து மருமகள்களை பாதுகாக்க முடியாமல் போய்விடும் என்பதால், குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. அதே நேரம் மருமகள்களிடம் இருந்து முதியவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு மேனகா காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications