ஆற்று நீரில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பி... குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் பரிதாப பலி
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆற்று நீரில் உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்த விபத்தில், அதில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் டிக்காம்கர் மாவட்டத்தில் குதா என்ற கிராமத்திற்கு அருகே உர் என்ற ஆறு ஓடுகிறது. நேற்று இந்த ஆற்று நீரில் 1100 கிலோவாட் சக்தி கொண்ட உயரழுத்த மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதனால் ஆற்று நீரில் மின்சாரம் பாய்ந்தது.
இதில், அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுனில்(13), தீபக்(13), ப்ரிஜேந்திரா(14) மற்றும் கவுசல்(15) ஆகிய 4 சிறுவர்களையும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே நான்கு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, ஆற்று நீரில் மின்சாரம் பாய்ந்து நான்கு சிறுவர்கள் பலியான விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மத்தியப் பிரதேச மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications