துடிதுடித்து இறந்த சிறுவர்கள்.. 4 உயிர்கள் போச்சே! மேற்கு வங்கத்தை அதிர வைத்த ஹீலியம் பலூன் விபத்து
மேற்கு வங்கத்தில் ஹீலியம் பலூன் வெடித்த விபத்தில் வியாபாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹீலியம் பலூன் வெடித்த விபத்தில் வியாபாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் 2 பேரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனா மாவட்டம் ஜெயநகரில் ஹீலியம் கேஸ் நிரப்பப்பட்ட பலூன்கள் விற்பனை செய்து வந்தவர் முசிராம் மோண்டல் (வயது 35).
இந்த நிலையில் இவரிடம் ஹீலியம் பலூன்களை குதுபுதீன் மிஸ்திரி (வயது 35), ஷாஹித் முல்லா (13), அபிர் காஜ் (8) ஆகியோர் வாங்க சென்றனர். அவர் அருகே 3 பேரும் நின்றுகொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறின.

4 பேர் உயிரிழப்பு
இதில் பலூன் வியாபாரி முசிராம் மோண்டல், குதுபுதீன் மிஸ்திரி, குழந்தைகள் ஷாஹித் முல்லா, அபிர் காஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த மேலும் சிலர் இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிலர் உயிருக்கு ஆபத்து
இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் ஹீலியம் பலூன் விபத்து
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் இதேபோல் ஹீலியம் பலூன்கள் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை முன் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

வாரிசு பட ரிலீசில் விபத்து
குழந்தைகள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஹீலியம் பலூன் விற்ற வியாபாரியை போலீஸ் கைது செய்தது. அதேபோல் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி திரையரங்கில் வாரிசு திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தபோது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட ஹீலியம் கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டது.

மதுரையில் வியாபாரி கைது
ஹீலியம் கேஸ் பலூன்களால் வெடி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் பல இடங்களில் அதை விற்க பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் உள்ளன. சமீபத்தில் மதுரை தல்லாகுளத்தில் ஹீலியம் கேஸ் பலூன்களை விற்பனை செய்து வந்த வியாபாரியை போலீசார் கைது செய்து அவரிடம் பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications