டெல்லியில் சீரழிக்கப்பட்ட 4 வயது சிறுமியின் காயங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது சிறுமிக்கு ஏற்பட்ட காயங்களை பார்க்கையில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட காயங்கள் நினைவுக்கு வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியில் உள்ள கேஷவ்புரத்தில் இருக்கும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் அவரை கல்லால் அடித்ததுடன், கழுத்தை நெறித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவரின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் காயங்களை பார்க்கையில் நிர்பயாவின் காயங்கள் நினைவுக்கு வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,
சிறுமியின் குடல், மர்ம உறுப்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரது உடல் முழுவதும் கடித்து வைத்த காயமும் உள்ளது. அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி உள்ளது. அவர் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என்றனர்.
சிறுமியின் தந்தை கூறுகையில்,
வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிய என் மகளுக்கு உணவு மற்றும் ரூ.10 தருகிறேன் என ஒருவர் அவரை அழைத்துச் சென்றுள்ளார். காட்டுப் பகுதியில் வைத்து அவரும், அங்கு ஏற்கனவே காத்திருந்தவரும் என் மகளை பலாத்காரம் செய்துள்ளனர். இது திட்டமிட்ட செயல் ஆகும். அவர்கள் என் மகளை கொலை செய்ய முயன்றபோது அந்த வழியாக ஒரு பெண் வருவதை பார்த்துவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர் என்றார்.
சிறுமி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் விபரங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.