டெல்லியில் பயங்கரம்: வீடு புகுந்து பல் டாக்டரை அடித்துக் கொலை செய்த கும்பல்
டெல்லி: டெல்லியில் 40 வயது பல் டாக்டரை 15 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அடித்துக் கொலை செய்துள்ளது.
டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் மனைவி, மகனுடன் வசித்து வந்தவர் பங்கஞ் நரங்(40). பல் டாக்டர். நேற்று இரவு அவர் தனது வீட்டிற்கு வெளியே நடைபயிற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற இருவர் அவரை உரசியுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து ஓடிய அந்த இருவரும் சிறிது நேரத்தில் 12 பேருடன் திரும்பி வந்துள்ளனர். அந்த 15 பேரும் நரங்கின் வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்து நொறுக்கினர். அவரின் அலறல் சப்தம் கேட்டு அவரை காப்பாற்ற ஓடி வந்தவர்களையும் தாக்கினர்.
உடனே அப்பகுதி மக்கள் நள்ளிரவு 12 மணிக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அந்த கும்பல் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த நரங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 மைனர்கள் உள்பட 8 பேரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications