ஜார்க்கண்டில் 1,700 டெட்டனேட்டர்கள், 200 குக்கர் குண்டுகள், 400 கிலோ வெடிமருந்து கண்டெடுப்பு!!
ராஞ்சி: சட்டசபை தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1700 டெட்டனேட்டர்கள், 400 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட பல பயங்கர ஆயுதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் வரும் 25-ந் தேதி தொடங்கி டிசம்பர் 23-ந் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடக்க இருக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆதிக்க உள்ள மாநிலம் என்பதால் மத்திய சிறப்பு காவல் படை இங்கு சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை லத்திஹர் மாவட்டத்தின் போகாக்கர்-டண்டியா இடையே ஜாகுவார் போலீஸாரும் கோப்ரா படையினரும் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன வெடிப் பொருட்கள் சிக்கின.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது, "இந்த பகுதியில் 1,700 டெட்டனேட்டர்கள், 3 காஸ் சிலிண்டர்களுடன் இணைந்த 50 கிலோ வெடி மருந்து, 5 கிலோ கேன் வெடிகுண்டு, 400 கிலோ யூரியா மற்றும் பெட்ரோல் நிறைந்த வெடிமருந்து, ராட்சத பராமரிப்பு மெஷின்கள், 2 ட்ரில்லர்கள், 400 ஊசி, தொழில்நுட்ப பொருட்கள், 200 குக்கர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் இங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை குறிவைத்து சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த தேடுதல் வேட்டையின் மூலம் நிச்சயம் நாச வேலை தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேட்பாளர்களுக்கும் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் மாவோயிஸ்டுகள் வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களது இருப்பிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றனர்,