வருமானம் இல்லை... நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய நகரங்கள்!
டெல்லி: சீனா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில், நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளால் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருப்பதாக "இந்தியா ஸ்பெண்ட்" ஆய்வு கூறுகின்றது.
சீனாவில் மொத்த வருவாயில் நகரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 25 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நகரப்புறங்களில் வருமானம் 1.1 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு...
வரும் 2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 40.4 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சூழலில் நகர்ப்புறங்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கின்றது.

வீட்டு வரி மூலம்...
மேலும், நகர்ப்புறங்களில் வீட்டு வரி மூலமாக மட்டுமே பெரும்பான்மையான வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு கணக்கீட்டின் படி, பிரான்ஸ் நாட்டில் சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் 4.3 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 0.48 சதவீதமாக உள்ளது.

நிதிகமிஷன்...
எனவே தான் 14வது நிதி கமிஷன் இந்தியாவில் நகர்ப்புற வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த உயர்வானது 10 சதவீதமாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி...
ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்க தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, மாநகராட்சி, நகராட்சி வருமானத்தை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சீனாவில்...
சீனாவின் மொத்த அரசு செலவுகளில் நகர வருமானம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கடந்த 2009ம் ஆண்டு விவரப்படி, 64.7 சதவீத செலவுகள் நகரங்களின் வருமானங்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

கட்டாயம்...
ஆனால், இந்தியாவில் நகர வருமானம் குறைவு என்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என இந்த ஆய்வுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications