டெல்லியில் 6 ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது
டெல்லி: டெல்லியில் 6 ஆப்பிரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில், காங்கோ இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல ஹைதராபாத்தில் நைஜீரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பை மேலும் அதிகமாக்கும் வகையில் 6 ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அமைந்தது.

இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது 6 பேர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் சிக்கியுள்ளனர்.
ஆனால் இந்த 6 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நிறவெறி சம்பந்தமானதல்ல என்றும் எதேச்சையாக நடந்த சம்பவம் என்றும் டெல்லி காவல்துறை விளக்கியுள்ளது. மெஹ்ராலி பகுதியில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மாணவரகள்.
சம்பவத்தன்று அதாவது வியாழக்கிழமை இரவு நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 6 ஆப்பிரிக்கர்கள் லேசான காயமடைந்தனர். அவர்களில் இருவர் உகாண்டா, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள். இரு நைஜீரிய ஆண்களும் காயமடைந்தனர்.
கிரிக்கெட் பேட்டுகளால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதல் திட்டமிட்டு நடக்கவில்லை என்றும் எதேச்சையாக நடந்தது என்றும் போலீஸார் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள் தங்களது இருப்பிடத்தில் சத்தமாக மியூசிக் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications