குடியரசு தின விழா: அஸ்ஸாமில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகளால் பதற்றம்
குவஹாத்தி: குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் அஸ்ஸாமில் 1 மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அஸ்ஸாமில் தனிநாடுகோரும் உல்பா- ஐ அமைப்பினர் இன்று பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த உல்பா-ஐ உள்ளிட்ட 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர்தான் சரணடைந்திருந்தனர். இந்நிலையில் உல்பா-ஐ அமைப்பினரின் வேலை நிறுத்த அழைப்பால் பாதுகாப்பு படையினர் அஸ்ஸாமில் உஷார்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே அஸ்ஸாமின் திப்ரூகர், சோனாரி, துலியாஜன், டோம்டோமா உள்ளிட்ட இடங்களில் 1 மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவங்கள் குறித்து அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தமது ட்விட்டர் பக்கத்தில், குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது கோழைத்தனமான நடவடிக்கை,
நாட்டின் புனிதமான தினத்தில் விரக்தியில் இருக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் இத்தகைய செயல்களை அரங்கேற்றியிருக்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications