கொல்லம் கோவில் தீ விபத்து: 5 பேர் கைது- விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டு ஆய்வாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கொல்லம் அருகே உள்ள பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோயில் திருவிழாவில் நேற்று அதிகாலை பொதுமக்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, போட்டிக் கொண்டு பட்டாசுகள் வெடித்தனர். அப்போது தீப்பொறிகள் பறந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்தது.

அதனால், பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயில் தேவஸ்தான கட்டடம் முழுவதுமாக கருகி இடிந்து விழுந்தது. மேலும், ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இந்த கோர தீவிபத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிவிட்டன. இதுவரை 56 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் திருவனந்தபுரம், கொல்லம், பரவூர், திருவாங்கூர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாணவேடிக்கை நிகழ்வில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கேரள டிஜிபி கூறியுள்ளார்.
இதனிடையே கொல்லம் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டு ஆய்வாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications