சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்
சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. அங்கு இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வெங்கட்ராஜன் என்பவரின் கட்டடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி ,முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன.
இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.
இதில் கோபி வீடு, அவரது அருகில் இருந்த வீடு, மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடுகள் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
மேலும் சிலிண்டர் வெடித்துச் சிதறியபோது உடைந்த கட்டட பாகங்கள் அல்லது கற்கள் சாலையில் இருந்த பால்காரர் மற்றும் அருகே கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இடிந்து விழுந்த 8 மாடி கட்டடம் - போராடி மீட்கப்பட்ட 5 வயது சிறுமி
- சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , பூஜாஸ்ரீ,வெங்கடராஜன் உள்ளிட்ட 12 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியின்போது முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் மீட்கப்பட்டார்.
மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 6 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்புத்துறை சிறப்பு அலுவலர் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் கார்த்திக் ராம், எல்லம்மாள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.
மேலும் அவர், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் முடிவிலேயே விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பலர், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்ததால் அந்த பகுதியில் கூட்டம் அதிகமானது.
இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- குழந்தை வளர்ப்பு மன அழுத்தம் தருகிறதா? பரிணாமவியல் சொல்வது என்ன?
- தமிழ்நாடு: சிறார்களைப் பயன்படுத்தும் குற்றக் குழுக்கள்: - மாஸ்டர்' படம் சொல்வது உண்மையில் நடக்கிறதா?
- "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லை இறந்து போவோம்": ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
- ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி: 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பால்வெளி வரை பார்க்கலாம்
- பாலியல் புகார் கூறிய சீன டென்னிஸ் வீராங்கனைக்கு நடந்தது என்ன?
- ஹாரி பாட்டர் படத்துக்கு 20 வயது: நடிகர்கள் என்ன செய்கின்றனர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்














Click it and Unblock the Notifications