பதுங்கி பாய்ந்த பயங்கரவாதிகள்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்! ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இவர்கள் லக்ஷர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது பனி காலம் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் வழக்கமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் அதிகரிக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் காவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை நடத்தினர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஜம்மு காஷ்மீர் காவல்துறை உறுதி செய்திருக்கிறது. அதேபோல தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து வேறு யாரேனும் தப்பி சென்றிருக்கிறார்களா? என்பது குறித்தும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ட்ரோன்கள் மூலம் போதை பொருட்கள், ஆயுதங்கள் இந்திய எல்லை பகுதியில் கடத்தப்பட்டன. இந்த முயற்சியை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications