11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுச் சிறை
சிக்மகளூர்: 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து சிக்மகளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிக்மகளூர் அருகே உள்ள கல்தொட்டி பகுதியை சேர்ந்தவ கூலித் தொழிலாளியான 25 வயது ராஜூ, அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை கடந்தாண்டு ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வீட்டில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதுடன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை சிக்மகளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இது குறித்து சிக்மகளூர் கிராமப்புற போலீசில் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜூவை கைது செய்து சிக்மகளூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோமலா, குற்றம் சாட்டப்பட்ட ராஜூவுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையில் ரூ.5 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு வழங்கும்படியும் மாஜிஸ்திரேட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.