69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்
டெல்லி: தாழ்த்தப்பட்டோர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில் கல்வியில் 69% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்பதைத் தெளிவுப்படுத்தும் மனுவை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவி ஹர்ஷிணி சார்பில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, ஹர்ஷிணி சார்பில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் ஆஜராகி, இந்தியா முழுவதும் கல்வியில் 50% இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு கடைப்பிடிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் எந்த அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? என்பதை மாநில அரசு விளக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, "69% இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவாகும். ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இதுபோன்ற இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவற்றை ஆராய்ந்து பதிலளிக்க கால அவகாசம் தேவை என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கல்வியில் 69% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அந்த மனுவுக்கு மனுதாரர் தரப்பில் அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications