கொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்
கொல்கத்தா: சென்னையிலிருந்து மேற்கு வங்கத்திற்கு சென்ற தொழிலாளர்கள் 7 பேர் அவர்களது கிராமத்தில் உள்ள மரக்கிளைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பாராட்டுக்குரிய விழிப்புணர்வு இது?
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகலை நாடு முழுவதும் கடைப்பிடிக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மாநிலம் விட்டு மாநிலத்தில் பிழைப்பதற்காக வந்திருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
அந்த வகையில் சென்னையில் பணிபுரிந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் 7 பேர் அவர்களது சொந்த கிராமமான பாங்கிதீ கிராமத்திற்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்றனர். இவர்கள் வருவதற்கு முன்பே அரசின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அந்த கிராமத்தினருக்கு ஏராளமாக இருக்கிறது என்பது அவர்களின் செயல்பாட்டில் நன்றாக தெரிகிறது.

மர உச்சி
ஆம். அந்த 7 பேரும் வரும் செய்தியை கேட்டு, மரங்களின் உச்சிகளில் மூங்கில்களால் வேயப்பட்ட சிறிய இடம் அமைக்கப்பட்டது. அவர்களது குடிசை வீடுகளில் 5 முதல் 6 பேர் வரை இருப்பதால் இவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்படுவது இயலாத காரியம் என்பதால் கிராமத்தினர் இத்தகைய முடிவை எடுத்தனர். 7 பேரும் இளைஞர்கள் என்பதால் கயிறு மூலம் மரங்களில் ஏற கயிறுகள் கொடுக்கப்பட்டன.

மின் விளக்குகள்
அவர்களும் இந்த முடிவை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். சுமார் 15 நாட்களாக மர உச்சியில்தான் வசித்து வருகிறார்கள். இயற்கை உபாதைகளுக்கும் உணவு உண்பதற்கு மட்டுமே அவர்கள் கீழே இறங்க வேண்டும். உணவுகளை அவரவர் குடும்பத்தினர் வந்து மரத்தடியில் வைத்துவிட்டு சென்றால் இவர்கள் கீழே இறங்கி வந்து சாப்பிடுவர். அது போல் அவர்களுக்கு கொசு கடிக்காமல் இருக்க நெட் கொடுக்கப்பட்டுள்ளது. மர உச்சியில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொருட்படுத்தவில்லை
இதுகுறித்து அந்த 7 பேர் கூறுகையில் நாங்கள் 6 மாதங்கள் கழித்து எங்கள் சொந்த கிராமத்திற்கு வந்திருக்கும். அப்படியிருக்கையில் எங்கள் வீடுகளை விட்டுவிட்டு மர உச்சியில் வாழ்வது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் கிராமத்தினரின் நன்மைக்காக அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை என்றனர்.

சமூக அக்கறை
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை சனிக்கிழமை முதல் அரசு கட்டடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர்களும் மரங்களில் இருந்து கீழே இறங்கி அரசு கட்டடங்களில் தங்கியுள்ளனர். அது போல் கழிப்பறைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கட்டடத் தொழிலாளர்கள், பிளம்பர்கள் கொண்டு அவற்றை கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நிரம்பியுள்ளன. படிப்பு, பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு கொரோனா பீதியால் இந்தியாவுக்கு வந்தவர்களே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாலும் சமூக அக்கறை இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.

விழிப்புணர்வு
அது போல் சமூக பரவலை தடுக்க வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றால் அடத்துக்கென வருகிறார்கள். அவ்வாறிருக்கையில் வேறு மாநிலங்களிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் தடுப்பு நடவடிக்கையை சரியாக உள்வாங்கிக் கொண்டு அந்த 7 பேர் வருவதற்கு முன்பே அவர்களுக்கு மர உச்சியில் குடில்களை அமைத்த கிராம மக்களின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியதே.












Click it and Unblock the Notifications