மே.வங்கத்தில்.. தூக்கில் தொங்கவிடப்பட்ட 7 வயது சிறுமி உடல் - குற்றவாளி அடித்துக் கொலை!
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி 7 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்ட நபரை, ஊர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போயுள்ளார். இந்நிலையில், இன்று மரமொன்றில் பிணமாக தொங்கிய அச்சிறுமியின் உடலை ஊர்மக்கள் கண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், சிறுமியைக் கடத்தி சீரழித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்ற இருவரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் உத்திரப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் அடுத்தடுத்து இந்தியாவில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.